Sunday 10 February 2013

விஸ்வரூபம் - புடிச்சிருக்கு! ஆனா புடிக்கல!


நிருபமா (பூஜா குமார்) கணவனைப் பற்றி மருத்துவரிடம் விளக்கும்போது “நான் கெட்டவ இல்ல டாக்டர்” “அவர் மேலயும் தப்பில்லன்னா எனக்கு ரொம்ப கில்டியா இருக்கும்” “இதோ பாருங்க அப்படியே பியூச்சர்ல எனக்கு தீபக் கூட செக்ஸ் குறிச்சு ஒரு ஐடியா இருந்தா என்ன தப்புங்கிறேள். அமெரிக்காவுல மழை பெய்யாது அவ்வுளவுதானே. போய்ட்டுபோறது.” என்று ஒரு இயல்பான அமெரிக்கப் பெண்ணையும், அதேவேளையில் கமல் விரும்பும் முற்போக்கான இந்தியப் பெண்ணையும் பிரதிபலிக்கிறார்.

தனது கணவனின் அலித்தன்மையை விளக்க “அவர் எப்படிப்பட்டவர்"னு நினைக்கும்போது, பின்னணியில் கமலின் தக தக திக தின தின தின என்ற கமலின் குரலுக்கேற்ப முகபாவனைகளைக் காட்டுவதில் அசத்தியிருக்கிறார் பூஜா குமார்.

“நாட் த காப்ஸ் யூ ஃபூல்” என தீபக் சொல்ல “என்ன வாய் நீள்றது, நான் ஒன்னும் உம்பொண்டாட்டி இல்ல” என்று பூஜா சொல்ல “நல்ல காலம் இல்ல. தேங்க் காட்” என்று தீபக் சொல்லும் போது, நிருபமாவாக வரும் பூஜா குமார் ரசிக்கவைக்கிறார்.

கதை சொல்ல ஆரம்பித்தவுடனேயே, வரும் அற்புதமான பாடல் நம்மை பக்தியில் லயிக்க வைக்கிறது.

அதிநவநீதா அபிநய ராஜா
கோகுல பாலா கோடிப்பிரகாசா
விரக நரக ஸ்ரீ ரக்ஷக மாலா
எத்தனை முறை நான் ஏங்கிச் சாவேன்
இத்தவணை எனை ஆட்கொள்வாயா
சூடிய வாடலை சூடியவா
களவாடிய சிந்தைத் திரும்பத்தா
பூதகியாக பனித்திடுவாயா
பாவை விரகம் பருகிடுவாயா
ஆயர்தம் மாயா நீ வா!



மேற்கண்ட வரிகள் கமலுடைய கம்பீரக்குரலில் வரும்போது அவர் ஆண் என்பதை மறைக்க முடியாவிட்டாலும், தனது நடிப்பால் அந்தப் பெண்தன்மையைக் கொண்டு வந்து வருகிறார். என்ன அற்புதமான வரிகள், அந்த வரிகளை அவர் உச்சரிக்கும்போது, ஆளவந்தானில் "நந்தகுமாரா, நந்தகுமாரா நாளைக் கடவுள் செய்வாயா? மிருகம் தின்ற எச்சம் கொண்டு மீண்டும் கடவுள் செய்வாயா?" என்ற பாடல் வரிகள் ஞாபகம் வருகிறது. மேற்கண்ட வரிகளில் "சூடிய வாடலை சூடியவா, களவாடிய சிந்தைத் திரும்பத்தா" அற்புதம், மகா அற்புதம். உச்சரிப்பும் சரி, ஆடலும் சரி, நடிப்பும் சரி அசத்தியிருக்கிறார் கமல். இப்படி அட்சர சுத்தமாக பாடவும், ஆடவும், நடிக்கவும் தெரிந்த நடிகர் உலகிலேயே கமலைத் தவிர வேறு யாரும் இருக்க மாட்டார்கள்.

“பாப்பாத்தியம்மா நீ சாப்பிட்டுட்டு சொல்லு உப்பு காரம் போதுமான்னு” என்று கமல் கோழியை சமைத்துவிட்டு, ஆண்டிரியாவிடம் சொல்லும் காட்சித் தேவையா? தெரியவில்லை. அதற்கு முன் காட்சியில் வரும் பாடலில் ஆன்மிகவாதிகள் கூட எழுத முடியாத வரிகளை எழுதி உணர்வுப்பூர்வமான ஒரு பக்திப் பாடலைப் பாடியவரைப் பாராட்ட மனம் வருமுன்பே இப்படி ஒரு காட்சியைப் புகுத்தி நமக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறார் கமல்.

“மணவாட்டியே மணாளனின் பாக்கியம்” “நீங்க பின் தூங்கி முன் எழ வேண்டாம்.” என்ற வசனங்கள் முற்போக்காளர்கள் பலரும் பழைமையைத் திருப்பிப் போட்டுப் படித்துவிட்டு அதை முற்போக்காகக் காட்டுகிறார்கள், அதற்கு பகுத்தறிவெல்லாம் வேண்டாம். அவர்கள் பகுத்தறிவாளர்கள் அல்லர் என்பதை நிரூபிப்பதாக உள்ளது.

ஃபருக்கிடம் அடி வாங்கிக் கொண்டே இருக்கும் கமல், திடீரென்று “கிருஷ்ணா” என்று கதறுகிறார். இதையே முதலில் நம்ப முடியவில்லை. “கிருஷ்ணாவா? கொப்பன்மவனே, முஸ்லிம்னு சொன்னே!” என்று ஃபரூக் கேட்க “அல்லா கி கசம், நான் முஸ்லிம்தான். ஆனா, நல்ல கலைஞனும் கூட, பாத்திரத்தோட ஐக்கியமாயிட்டேன். உங்களுக்குப் பிடிக்கலனா சொல்லுங்க அல்லா ஹூ அக்பர். போதுமா?” என்று கமல் சொல்வது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. அதுவும் ஒரு ரா அதிகாரி ஒரு தீவிரவாதியிடம் இப்படிப் பேசுவார் என்பதே லாஜிக் இல்லாதது. “மஜாவா இருக்கா? பத்தலையா?” என்று சொல்லி கமலை ஃபரூக் அடிக்கும்போது, எப்படி தீபக் அதைத் தடுக்கிறார். அதுவரை அவர் அடிக்கும்போது எதுவும் சொல்லவில்லையே?

“நம்மால அந்த தௌஃபீக் சாகப்போறான். அல்லா நம்மள மன்னிக்கவே மாட்டாரு.” என்று கமல் சொல்லும்போது “நம்மளையா, உங்களனு சொல்லுங்க சார், இம்தியாஸ் என்னோட பொய் பேருதான். என் மதம் இல்ல என்று அவரது உதவியாளர் சொல்லும் காட்சி எதற்காக? யாரைத் திருப்தி படுத்துவதற்காக என்பது புரியவில்லை. அவன் இந்து என்று காட்டுகிறாரா? இல்லை. இருக்காது. இந்தியனாக இருந்தால் எந்தத் தவறும் பாவம்தான் என்று அவர் கதறுவதை விட அதிகமாகக் கதறியிருப்பானே. அவன் வேறு ஏதோ ஒரு மதமாகத்தான் இருக்கக்கூடும். அந்த மதமும் கமலுக்கு மட்டும்தான் தெரிந்திருக்க வேண்டும்.

உமர் குரேசியின் கண்களைப் பற்றி பூஜாக்குமார் வினவ கமல் அவர் எப்போதும் அப்படி இருந்ததில்லை. சிசிஎத்தின் விளைவு அது என்று கூறும்போது, “கடவுள் தான் காப்பாத்தணும்” என பூஜாக்குமார் சொல்ல. “எந்தக் கடவுள்” என்று கூறும் கமல் ஏன் படம் முழுவதும் தொழுது கொண்டும் “அல்லா நம்மள மன்னிக்கமாட்டார் என்று வசனம் பேசிக் கொண்டிருக்கிறார் என்பதும் ஏன் என்று புரியவில்லை.

“வாட் காட் இஸ் தாட், அல்லா”. “தாட் இஸ் மை ஹஸ்பன்ட்ஸ் காட், மை காட் ஹேஸ் ஃபோர் ஹேன்ட்ஸ்” “தென் ஹௌ வில் யு க்ரூசிஃபை ஹிம்.” “வீ டோன்ட் க்ரூசிஃபை ஆர் காட், வீ டங்க் ஹிம் இன் த சீ.”இந்தக் காட்சி எதற்காக, உயிருள்ள மனிதனை சிலுவையில் அறைவதற்கும், களிமண் பொம்மையைக் கடலில் வீசுவதற்கும் பெருத்த வித்தியாசம் இருக்கிறதே. இதில் யாரை எள்ளி நகையாடுகிறீர்கள் கமல், இதில் பெரிய பத்திரிகைகள் எல்லாம் இந்தக் காட்சியைக் குறித்து கமலின் "அக்மார்க்"  நையாண்டி என்று அப்ளாஸ் கொடுத்திருப்பது, துக்கமயமான சிரிப்பை உண்டாக்குகிறது.

தௌஃபீக் உமரிடம் மாட்டும் காட்சியில் கமலுக்குப் பதில் சொல்வதற்காகவே சலீம் நின்று கொண்டு பதில் சொல்லிவிட்டு, அதன் பிறகு போய் தௌஃபீக்கை வெறிகொண்டு அடிப்பது என்பது அப்பட்டமான சினிமாத்தனம். கடவுள் சம்பந்தமான நாத்திக வசனங்கள் மற்றும் எள்ளல்கள் வரும் இடங்களிலெல்லாம் லாஜிக் எக்ஸ்க்ளூசிவ்லி மிஸ்ஸிங்.

“எப்பிஐக்கு இன்பார்ம் பண்ணு, நாம செய்ய வேண்டியத அவுங்களே செய்திடுவாங்க” என்று ஒரு அல்கைதா தீவிரவாதி அமெரிக்காவில் இருந்து கொண்டு சொல்வது, எப்பிஐயை எவ்வளவு முட்டாளாக நினைக்கிறார்கள் இவர்கள் என்பதைக் காட்டுகிறது. கமலின் "வேட்டையாடு விளையாடு" படத்திலேயும் அப்படித்தான் காட்டுவார்கள்.

தசாவதாரத்தில் பல்ராம் நாயுடுவிடம் மாட்டிக் கொள்ளும் விஞ்ஞானி கமல் பேசுவதைப் போலவே இருக்கிறது. விஸ்வரூபத்தில் கமல் எப்பிஐயிடம் பேசும் வசனங்கள். ஆனால் அவர்கள் பல்ராம் நாயுடுபோல் காமடி செய்யவில்லை. அடிக்கிறார்கள்… உதைக்கிறார்கள்…

“அமெரிக்கன் பேங்க்ஸ்-அ என் கஸ்டமர்கள் நம்பலையே!” என தீபக் சொல்வது,

கமல் “வாட் இஸ் ராங் வித் தெம். இப்படியா பீத்திக்கிறது” “ஓபாமா ரேட்டிங்செல்லாம் ஏத்த வேண்டாமா?” “அதுக்காக மனுஷாள் சாவ இப்படியா தீபாவளிய மாதிரி கொண்டாடுறது?” “அசுராளக் கொன்னா கொண்டாடத் தானே செய்வா!” “அத அசுரனோடு அண்ணன் தம்பி பொண்டாட்டி புள்ளகிட்ட சொல்லு பாப்போம்!” “அவா கிட்ட நமக்கென்ன பேச்சு” போன்ற வசனங்கள் சூப்பர் சர்வதேச அரசியல் வசனங்கள்.

படுக்கையறைக் காட்சிகள்தான் படத்தில் இல்லையே தவிர படத்தின் விரசத்திற்கு A கொடுப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. ஆபாசக் காணொளி இல்லாமலேயே வெறும் குரலிலேயே எப்படி விரசத்தை உணரச் செய்யமுடியும் என்பதற்கு கமலிடம்தான் டியூஷன் எடுக்க வேண்டும்.

“யாராவது பொம்மனாட்டி இருக்காளானு கண்டுபிடிங்க, முக்காவாசி பொம்பளையா இருக்காது” என்று நிருபமா டிடெக்டிவ் பீட்டரிடம் சொல்வது.

“போன்ல கேக்கதானே முடியும் பார்க்க முடியாதுல்லியா?” என்று தன் மனைவி வேறொரு ஆடவனுடன் இருக்கிறாள் என்பதை அறிந்தும், இப்படிக் கேட்பது.

அடிபட்டிருக்கும் கமலுக்கு ஆண்டிரியா ஸிப் அவிழ்த்து விடும்போது அங்கே பூஜாக்குமார் நுழைய, ஆண்டிரியா பூஜாக்குமாரிடம், “டூ யூ வான்ட் எ” என்று  கேட்பது.

“உன் பிராக்கு அடியில ஒரு சின்ன பாக்ஸ் இருக்கு. எடுத்துண்டு வா” இப்படி ஆண்டிரியா சொல்ல அடுத்தடுத்து அனைவரும் அதையே கூறுவது என மேற்படி காட்சிகள் அனைத்தும் பார்ப்பவர்களைக் கூசச் செய்யும்

இதையும் தவிர தீவிரவாதக் கதையைச் சொல்வதால் வன்முறை தவிர்க்கமுடியாததாகிறது. ஆங்காங்க ரத்தமும் சதையும், கைகளை வெட்டுவது, பாதி உடல் துண்டாக வந்து விழுவது. கண்கள் இரண்டையும் குத்திப் பிடுங்குவது என முகம் சுளிக்க வைக்கும் காட்கள் இருப்பதால் இதற்கு ஒரு A கொடுக்க வேண்டியுள்ளது.

“உங்க ஆளை தைக்கணும்” “என்னது தையலா? ஐயோ டாக்டர்?” “நீதானே டாக்டர். நீ வேணா தையல் போட்றியா?” “நான் மெடிக்கல் டாக்டர் இல்ல” “ஆமாம், ய ய ய ஷீஸ் ஜஸ்ட் எ நியூக்ளியர் அனகாலஜிஸ்ட்” என்று நியூக்ளியர் பி.எச்.டி. படித்திருக்கும் ஒருவரை “ஷீஸ் ஜஸ்ட் எ” என்று மட்டப்படுத்தி அசிங்கப்படுத்தும் காட்சியைப் பலரை ரசிக்க வைத்திருக்கிறார் கமல்.

இந்தப் படத்தில் நாசரையும், ஆண்டிரியாவையும் ஏன் நடிக்க வைத்தார்கள் என்பது புரியவில்லை. ஒரு வேளை இரண்டாம் பாகத்தில் யூஸ் பண்ணியிருப்பாரோ என்னவோ?

பூஜாக்குமார் ஏன் மருத்துவரிடம் சென்றார். எப்போது மருத்துவரை  விட்டு வந்தார் என்பதே தெரியவில்லை. படத்தில் ஏகப்பட்ட பிளாஷ்பேக்குகள், மெயின் கதை புரிகிறதே தவிர, யார் எதை பிளாஷ்பேக்கில் யோசித்துப் பார்த்தார்கள் என்பது விளங்கமாட்டேன் என்கிறது. யாருடைய பார்வையிலிருந்து கதை சொல்லப்படுகிறது என்பதிலும் குழப்பமாக இருக்கிறது.

எனக்கு, இந்தப்படத்தில் பிடித்த சில விஷயங்கள்.

1)   ராகுல் போஸ் பூஜா குமார், கமல் ஆகியோரது நடிப்பு.
2)   படத்தில் வரும் முதல் பாடல் முழுவதுமாக (பாடல், ஆடல், காட்சியமைப்பு).
3)   ஒரு சில வசனங்கள்.ராகுல் போஸ் பேசும் வசனம் " அல்லா ஏன் இவ்வளவு கொடுமைப்படுத்துறார். ஜலால் ஆசைப்படி லண்டன்ல எஞ்சினியருக்குப் படிக்க வச்சுருக்கலாம். கூடவே நாசரையும் அனுப்பியிருந்தா டாக்டராயிருப்பான். இப்படி சாம்பலாகியிருக்க மாட்டான். ஏன்? ஏன்? நான் அல்லாவுக்காக சண்டைப் போட்டேன். நான் ஜிகாதி இல்லையா? பின்ன ஏன்?” அதற்கு கமல் “உமர் பாய், உன் கேள்வியிலே பதிலும் இருக்கு. சண்டைனா சாவும் வரும். நம்மள மாறி ஜிகாதிங்க கண்ணீர் சிந்தக் கூடாது, ரத்தம்தான் சிந்தணும்.”
4)   தூக்குமேடையில் “நான் நிரபராதி நான் நிரபராதி“ என்று கதறும் தௌஃபீக்கைப் பார்த்துவிட்டு அவனது தாய் “என் மகனைக் காப்பாத்துங்க. தௌஃபீக்… மகனே.. என் மகனே,,,” என்றுக் கதறி “அவன் நிரபராதி… அவன விட்டுடுங்கப்பா…” என்று அழுது புலம்புதாய், தன் மகன் இறந்துவிட்டான் என்ற அறிவிப்பைக் கேட்டதும் “ஏய்! கஷ்மீரி உன் சகோதரனை என்ன செஞ்சுட்டாங்க பாரு..” என்றதும் அந்தத் தாயைக் கமல் பார்த்துக் கண்கலங்கும் காட்சியில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் கமல்.

இப்போதே விமர்சனம் என்ற பெயரில் பாதி கதையைச் சொல்லிவிட்டது போன்ற குற்ற உணர்வு எனக்கு ஏற்படுகிறது. இப்படிச் செய்வது தவறுதான். ஆனால் வேறு வழியில்லை, கமல் படம் என்றாலே படத்தில் வரும் ஒவ்வொரு வரியையும் விமர்சிக்கும் (நல்லதாகவும், அல்லதாகவும்) அளவுக்கே படம் இருக்கும்.

படத்தைப் பார்த்து விட்டு வெளியே வந்த ஒரு இளம் ஜோடியைக் கண்டேன். "படம் எப்படி இருந்தது?" என்று கணவன் கேட்க, "நல்லா இருந்தது. ஆனா ஒண்ணுமே புரியல" என்று மனைவி சொல்கிறாள். "அதான் கமல் படம், அவர் படம் பார்க்கணும்னா பி.எச்.டி முடிச்சவங்கதான் பார்க்க முடியும்." என்றார் கணவர்.

கமல் நம்பும் உழைப்பாளி மக்களின் விடுதலைக்கான கதையாக இது தெரியவில்லை. அமெரிக்க முதலாளிகளுக்கும், மேற்கத்திய அறிவுஜீவிகளுக்குமான படமாகவே இது தெரிகிறது. தொழிலாளர்களுக்கான "அன்பே சிவம்" மாதிரி படங்கள் இனி எடுக்க மாட்டார் போல் இருக்கிறது.

"விஸ்வரூபம்" படம் பிட்டுபிட்டா பாத்தா நல்லாத்தான் இருக்கு. மொத்தமா பாத்தா புஸ்வானமா (குழப்பமா) இருக்கு?

3 comments:

  1. முழுவதுமாக படித்துவிட்டேன்.இன்னும் படம் பார்க்கவில்லை.பிட்டு பிட்டா பார்த்திங்களா? இல்லை முழு படமாக பார்த்தீர்களா? இவ்வளவு வசனங்களையும், காட்சிகளையும் ஞாபகப்படுத்தி விமர்சிக்க உங்களால் மட்டுமே முடியும்.
    கமலின் படம் என்பதாலேயே, இந்த அக்கறையாக இருக்கவேண்டும் என எண்ணுகிறேன்.கமலின் மனமும் சமூகத்தின் ஏகப்பட்ட முரண்களை சுமந்து கொண்டுதானே அலைகிறது பாவம்.கமல் வெளிப்படுத்தும் கடவுள் மற்றும் மத நம்பிக்கைகள் வெகுஜன பாராட்டுகளை பெற்றுவிட்டது என்பது வணிக ரீதியான வெற்றியால் நிருபணமாகிறது.வெகுஜனத்திற்கும் கடவுள் மற்றும் மத நம்பிக்கைகளை பொருத்தவரை வெளியே சொல்ல முடியாத மற்றும் குழப்பமான கருத்தொட்டமே நிகழ்கிறது என்பது இப்படம் பார்த்து வெளியெறும் ரசிகையின் எண்ண ஓட்டமாக எடுத்துக்கொள்கிறேன்.
    மற்றபடி மிக விரிவான இந்த விமர்சனம் மிக மிக அருமை.வாழ்த்துக்கள் உங்கள் ஞாபகசக்திக்கு.

    ReplyDelete
    Replies
    1. //முழுவதுமாக படித்துவிட்டேன்.இன்னும் படம் பார்க்கவில்லை.பிட்டு பிட்டா பார்த்திங்களா? இல்லை முழு படமாக பார்த்தீர்களா? //
      முழுப்படமாகத்தான் பார்த்தேன். தனித்தனி காட்சிகளாகப் பார்க்கும்போது நன்றாக இருப்பவையெல்லாம் கோர்த்துப் பார்க்கும்போது சரியாக இல்லை என்ற அர்த்தத்தில் சொன்னேன். படத்த 5 தடவை பாத்தா படமே மனப்பாடம் ஆயிடும்லையா? அதுவும் கமல் படம் என்றால் வசனங்கள் ஆணி அடித்தாற்போல் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும்.

      //கமல் வெளிப்படுத்தும் கடவுள் மற்றும் மத நம்பிக்கைகள் வெகுஜன பாராட்டுகளை பெற்றுவிட்டது என்பது வணிக ரீதியான வெற்றியால் நிருபணமாகிறது.//
      இந்த வெற்றி. போராட்டங்கள் இல்லாமல் இருந்திருந்தால் கிடைத்திருக்காது. ஹேராமுக்கு நேர்ந்த கதிதான் நேர்ந்திருக்கும். படம் வெற்றியடைந்ததினாலேயே கடவுள் மற்றும் மத நம்பிக்கைகள் வெகுஜன பாராட்டுகளை பெற்றுவிட்டது என்பதை ஏற்க முடியாது. மக்களுக்குப் புரிய வில்லை. அவ்வளவுதான். ஒரு காட்சியில் பூஜாக்குமார், தனது கள்ளக்காதலன் தீபக்குடன் டேட்டிங் போகும்போது அவரது அலுவலகத்தில் அவர் அணிந்திருக்கும் கோட்டை அவிழ்க்கும்போது ஒரு காஸ்டியூம் போட்டிருப்பார். நள்ளிரவில் திருட்டுத்தனமாக கணவன் அருகே வந்து படுக்கும்போது கோட்டை அவிழ்ப்பார். உள்ளாடைபோன்ற ஆடையை அணிந்திருப்பார். இதன்மூலம் கமல் என்ன சொல்ல வருகிறார் என்பது ஒரு சிலருக்குப் புரியும். பெரும்பாலான மக்களுக்குப் (வெகுஜனம்) புரியாது. எங்கே சொல்லுங்கள் அந்தக் காட்சியின் மூலமாக கமல் என்ன சொல்ல வருகிறார்.

      //வெகுஜனத்திற்கும் கடவுள் மற்றும் மத நம்பிக்கைகளை பொருத்தவரை வெளியே சொல்ல முடியாத மற்றும் குழப்பமான கருத்தொட்டமே நிகழ்கிறது என்பது இப்படம் பார்த்து வெளியெறும் ரசிகையின் எண்ண ஓட்டமாக எடுத்துக்கொள்கிறேன்.//
      ரசிகையின் எண்ணவோட்டம் கடவுள் மற்றும் மதம் குறித்த கருத்தியலில் இல்லை. பொதுவாகவே கமல் என்ன சொன்னாலும் அவர்களுக்குப் புரிவதில்லை. அவர்கள் பி.எச்.டி. படிக்கவில்லையல்லவா?

      இந்தப் படம் இப்போதுதான் ரிலீஸ் ஆகி ஓடிக்கொண்டிருக்கிறது. அதனால் எல்லாவற்றையும் விமர்சிக்க முடியவில்லை. ஆனால் ஒவ்வொரு காட்சியையும் விமர்சிக்க வேண்டியப் படம்தான் "விஸ்வரூபம்". படம் தியேட்டரை விட்டு வெளியேறியதும் விரிவான விமர்சனம் எழுத வேண்டும்.

      Delete
    2. வந்து கருத்திட்டமைக்கு நன்றி!

      Delete

நான் என் கருத்துகளைப் பதியவே (என் குரலைப் பதிவு செய்யவே) வலைப்பூப்பதிவுகளை இடுகிறேன்.

கண்ணியக்குறைவான மறுமொழிகளை வெளியிட இயலாது.

சில மறுமொழிகளுக்கு நான் பதிலளிக்கவில்லை என்றால், ஒன்று எனக்கு பதில் தெரியவில்லை அல்லது போராடிப் பயனில்லை (இந்தப் பழம் புளிக்கும்) என்ற எனது நிலையே.